இந்தியா, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் புஷ்பக் என்ற ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த மறுபயன்பாட்டு ஏவுகலத்தின் தரையிறக்க சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள செல்லகெரே என்ற பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் புஷ்பக் விமானத்தின் தரை இறங்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தரையிலிருந்து 4.5 கிலோ மீட்டர் உயரத்துக்கு புஷ்பக் ஏவுகலம் கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து, தானாக, கணிக்கப்பட்ட நேரத்தில், கணிக்கப்பட்ட இடத்தில் புஷ்பக் ஏவுகலம் தரையிறங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஏவுகலம் மிகக் குறைந்த செலவில் இந்தியாவின் விண்வெளி திட்டங்களை செயல்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அத்துடன், விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்கு இந்தியா எடுத்து வைத்துள்ள முதல் படி இதுவாகும் என கூறியுள்ளார்.