நடப்பு நிதி ஆண்டில் ஆசிய நாடுகளில் வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழும் என்று அமெரிக்க நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
கொரோனா ஊடரங்கால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக நெருக்கடி நிலையிலிருந்து மீளத் தொடங்கியது.
இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர், சர்வதேச அளவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போர் காரணமாக, இந்தியாவில் பணவீக்கம் உச்சத்தை தொட்டது.
இந்தச் சூழலில், 2022-23 நிதி ஆண்டில் ஆசிய நாடுகளில் வலுவான பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்று மோர்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று அந்நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. குறைவான நிறுவன வரி, உற்பத்தி ஊக்கத் திட்டம், வேலைவாய்ப்பில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை, உள்நாட்டுத் தேவை ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணங்களாக அமைந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தொழில் முதலீடுகள் நம்பிக்கைத் தருவதாகவும், நிறுவனங்களின் நிதி நிலைமை ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.