நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக சி.யு.இ.டி., என்ற தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சேர்க்கைக்கான தேர்வு, வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சி.யு.இ.டி., தேர்வின் முடிவுகள் வெளியாக 15 நாட்கள் ஆகும். இந்த நிலையில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் வேறு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களுக்கு மாற விரும்பினால், அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை முழுமையாக திருப்பி தர வேண்டும் என அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு என தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அக்டோபர் 2022 வரையில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மானியக்குழு தெரிவித்துள்ளது.
இதுபோல் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.