ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்குமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு கடந்த 10 மற்றும் 11ம் தேதி விசாரணை நடந்தது. பரபரப்பான வாதங்களுக்கு பிறகு தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்நிலையில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜூன் 23க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்டத்தை கூட்ட வேண்டும். பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பால் பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.