அமெரிக்க வரி நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு உதவியாக பருத்தி இறக்குமதி சுங்க விலக்கு நீட்டிப்பு.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 50 சதவீத வரி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட ஏற்றுமதி துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகம் நடைபெறும் நிலையில் அந்தத் துறை பெரிய சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், பாதிப்பை சமாளிக்க உதவியாக மத்திய அரசு பருத்திக்கான இறக்குமதி சுங்க விலக்கை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் படி, டிசம்பர் 31 வரை வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உற்பத்திச் செலவை குறைத்து, ஜவுளி துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பருத்தி விலையை நிலைப்படுத்துவதோடு, ஜவுளிப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தத்தையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.