அரசு விரைவு போக்குவரத்து கழக வருவாயை அதிகரிக்கும் முயற்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. உதிரி பாகங்களின் விலை ஏற்றம், டீசல் விலை உயர்வு, ஊழியர்களின் சம்பள உயர்வு, பஸ் கட்டணம் உயர்த்தப்படாதது, இலவச போக்குவரத்து அனுமதி போன்ற காரணங்களால் அரசு போக்குவரத்து கழகங்கள், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், பஸ் நிலையங்களில் வணிக வளாகங்கள் கட்டுவது, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள போக்குவரத்துக் கழக நிலங்களில் பெட்ரோல் 'பங்க்'குகளை அமைப்பது, வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு பஸ்களில் கூரியர், பார்சல் சேவையை அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் ஆரம்பமாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், முக்கிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு பார்சல் சேவை துவக்கப்பட உள்ளது.
இந்த பார்சல் சேவையில், 80 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்கு, கி.மீ., அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவு பஸ்களில் அனுப்பப்படும் பார்சல்கள், தனியார் லாரிகளில் அனுப்புவதை விட, விரைவாக சென்று சேரும் என்பதால், தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் பார்சல்களை அனுப்ப பலரும் ஆர்வம் தெரிவித்து உள்ளனர்.