அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் , ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 2-வது நாளாக நடைபெற்றது. 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7ம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கோபால், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.2,012ல் இருந்து ரூ.7,981 வரையிலும், நடத்துனர்களுக்கு ரூ,1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.9,329 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும். மேலும் அலுவலக பணியாளர்களுக்கு ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ரூ.8,476 வரையிலும், பயணசீட்டு பரிசோதகர்களுக்கு ரூ.4,692 முதல் ரூ.7,916 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த அனைத்து தொழிற்சங்கங்களும் ஒப்புதல் அளித்தது. ஆனால் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.