ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் நாடியது. அப்போது நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான் பி.எஃப்.ஐ அமைப்பு மீதான ரெய்டு நடவடிக்கைகள், கைது, வழக்குப்பதிவு சம்பவங்கள் நடந்தன. பின் பி.எஃப்.ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு சென்றது ஆர்.எஸ்.எஸ். மேலும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்த தேதியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தால் காவல்துறையானது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.