தென்கிழக்கு ரயில்வே, இந்தியாவின் அதிக நீளம் கொண்ட `சூப்பர் வாசுகி' எனும் ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவின் அதிக நீளம் கொண்ட `சூப்பர் வாசுகி' எனும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சரக்கு ரயில் சுமார் 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த நீளமான ரயில் ஸ்டேஷனைக் கடப்பதற்கு மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. மேலும் இதில் 295 வேகன்கள் உள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் 25,962 டன் நிலக்கரியை ஏற்றிச் செல்ல முடியும். இந்த நிலக்கரியைக் கொண்டு ஒரே நாளில் 3,000 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும், இந்த மிகப்பெரிய ரயிலை இயக்குவதற்கு ஆறு இன்ஜின்கள் பயன்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
தென்கிழக்கு மத்திய மண்டலத்தின் பிலாஸ்பூர் பிரிவில் உருவாக்கப்பட்ட இந்த `சூப்பர் வாசுகி' எனும் சரக்கு ரயில் கோர்பாவிலிருந்து சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானுக்கு 267 கி.மீ தூரத்தை 11.20 மணி நேரத்தில் கடந்துள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அதிக அளவிலான நிலக்கரிகள் தேவைப்படும் சமயத்தில் இந்த ரயிலைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் 2.8 கி.மீ நீளம் கொண்ட ஷேஷ்நாக் (SheshNaag) எனும் ரயில் இந்தியாவின் மிகநீளமான ரயிலாக அறியப்பட்டு வந்தது. தற்போது இந்த 'சூப்பர் வாசுகி' ரயில் அதிக நீளம் கொண்ட ரயிலாகக் கருதப்படுகிறது.