இந்த நிதியாண்டில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 6 முதல் 6.5% உயரும் என்று கேர் எட்ஜ் (CareEdge) மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக இருசக்கர வாகன விற்பனையில் சரிவு காணப்பட்டது. குறிப்பாக பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் பிஎஸ் 6 எமிஷன் வழிமுறைகளுக்கு மாறுவது போன்ற காரணங்களால் இந்தச் சரிவு நேர்ந்தது. வருடாந்திர அளவில், 2018-19 முதல் 2021-22 ஆண்டுகளில், 10% சரிவு காணப்பட்டது. கூடுதலாக, கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கம் மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் போன்ற காரணங்களாலும் இந்தச் சரிவு காணப்பட்டது. பின்னர், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் இருசக்கர வாகன விற்பனை 2.65% குறைந்தது. கிராமப்புற பொருளாதாரம் மெதுவாக வளர்ந்து வந்ததாலும், வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை நீட்டிக்கப்பட்ட தாலும், சுமார் 179 லட்சம் வாகனங்கள் விற்பனையாகாமல் இருந்தன. பின்னர், கடந்த நிதியாண்டின் பண்டிகை காலங்களில் வாகன விற்பனை சற்று உயர்ந்தாலும், பின்னர் ஏற்பட்ட பொருட்களின் விலையேற்றம் மற்றும் பணவீக்கம் காரணமாக மீண்டும் விற்பனை குறையத் தொடங்கியது. ஆனால், தற்போதைய நிலையில், கிராமப்புற பொருளாதாரம் சற்று மேம்பட்டு உள்ளதாலும், மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாலும் வாகன விற்பனை அதிகரிக்கும் என்று CareEdge என்ற மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன விற்பனையில் சுமார் 6 முதல் 6.5% உயர்வு காணப்படும் என்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களின் விலை குறித்தும் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண கம்பஷன் இன்ஜின் இருசக்கர வாகனங்களின் விலை 50 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை இருக்கும் என்றும், அதிவேக மின்சார வாகனங்களின் விலை 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது எனவே மின்சார வாகனங்களை நோக்கி பெருமளவு வாடிக்கையாளர்கள் நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விநியோகச் சங்கிலியின் பலதரப்பட்ட காரணங்களால் உற்பத்தியாளர்களுக்கு 50 முதல் 70 புள்ளிகள் வரை இழப்பு நேரலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.