உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில், இன்று காலை முதல் ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளன. அந்த நகரில் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் இன்று நேர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கீவ் நகரம் மட்டுமின்றி, லிவிவ், சைட்டோமிர், கேமல்நைட்ஸ்கை, டிநீப்ரோ, தெர்னோப்பில் போன்ற நகரங்களிலும் ரஷ்யா குண்டு மழை பொழிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பிபிசி எடுத்த ஏவுகணை தாக்குதல் தொடர்பான நேரடி காணொளி காட்சி, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தலைநகர் கீவ் நகரில் நடந்த தாக்குதல் குறித்து மேயர் விட்டாளி கிளிக்ட்ச்கோ உறுதி செய்துள்ளார். நகரின் பல்வேறு இடங்களில் பல குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், சுமார் 83 ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக கூறினார். கிரீமியா பாலத்தை தகர்த்ததன் எதிரொலியாக இந்த குண்டு மழை தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை அன்று கிரீமியா பாலம் தகர்க்கப்பட்டது. இதில் மூவர் பலியாகினர். ரஷ்யாவுடன் கர்ச் பகுதியை இணைக்கும் ஒரே தரைவழி மார்க்கமாக இந்த பாலம் இருந்து வந்தது. இது தகர்க்கப்பட்டதன் பின்னணியில் உக்ரைன் மட்டுமே உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு, ரஷ்யா தீவிர குண்டு மழை தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை அன்று, ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ரஷ்யா அப்பாவி பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் நாட்டை உலக வரைபடத்தில் இருந்து நீக்கும் நோக்கத்துடன் ரஷ்யா செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.