உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் நீதிமன்றத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
இந்தியாவில் கணிசமாக குறைந்திருந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்த போதிலும், பெரும்பாலோர் அதை பின்பற்றுவது இல்லை. அதேபோல், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்களும், வழக்கு விசாரணைக்காக வருபவர்களும் பெரும்பாலும் முகக்கவசம் அணிவது இல்லை. இதன் காரணமாக, உச்ச நீதிமன்ற ஊழியர்கள் பலர் கொரோனாவால் பாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று முறையீடு செய்வதற்காக ஏராளமான வழக்கறிஞர்கள் குவிந்தனர். இதை கண்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘ வழக்கறிஞர்கள் முறையீடு செய்வதற்காக வரும்போது அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அதற்கு பிறகு வாதங்களை வைக்க வேண்டும். முகக்கவசம் அணியாத காரணத்தால், நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இனிவரும் நாட்களில் நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் கட்டாயம் ஒரு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்,’ என உத்தரவிட்டார்.