மட்டான்சாஸ் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் மின்னல் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 பேர் காயமடைந்தனர். மேலும் 17 தீயணைப்பு வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மட்டான்சாஸில் உள்ள தீயணைப்புத் துறையின் தலைவர் ராபர்டோ டி லா டோரே கூறுகையில், மின்னல் ஒரு தொட்டியைத் தாக்கிய போது ஏற்பட்ட தீ பின்னர் இரண்டாவது தொட்டிக்குப் பரவியது.
தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில், ராணுவ ஹெலிகாப்டர்கள் மேலே பறந்து, தண்ணீரை பீய்ச்சியடித்தன. அப்போது தீ மேற்கு நோக்கி 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹவானாவை நோக்கி பரவியதாக ௯றினார். இது குறித்து அரசாங்கத்தின் முகநூல் பக்கத்தில் 'Matanzas விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 ஐ எட்டியுள்ளது. அதிலும் ஏழு பேர் ஹவானாவில் உள்ள கலிக்ஸ்டோ கார்சியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 17 தீயணைப்பு வீரர்களைக் காணவில்லை 'என்று கூறப்பட்டுள்ளது. கியூபாவில் ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த சம்பவமானது மிகவும் துரதிஷ்டவசமானது. மேலும் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் எவ்வளவு எரிந்தது என்பது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அத்துடன் கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் சனிக்கிழமையன்று அதிகாலை தீ விபத்து நடந்த பகுதிக்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் எண்ணெய் துறையில் அனுபவமுள்ள நட்பு நாடுகளிடம் உதவி கேட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது.