கடந்த வெள்ளிக்கிழமை, சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதன் பின்னர், விண்கலத்தை இரண்டாவது சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று, விண்கலத்தை மூன்றாவது புவி சுற்றுவட்ட பாதையில் உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. எதிர்பார்த்தபடி விண்கலம் பயணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று மதியம் விண்கலத்தை மூன்றாவது சுற்று வட்டப்பாதைக்கு உயர்த்தும் பணி நடைபெற்றது. இது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது, பூமியிலிருந்து குறைந்த பட்சம் 226 கிலோமீட்டர் மற்றும் அதிகபட்சம் 41603 கிலோமீட்டர் தொலைவில், நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 5 முறை சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த சுற்றுப் பாதைக்கு விண்கலத்தை உயர்த்தும் பணி நாளை மறுநாள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.