மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 59000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் ஆகியுள்ளது.
நேற்றைய சந்தை நேர முடிவில், 58817.29 ஆக இருந்த சென்செக்ஸ் குறியீட்டு எண், இன்று மதியம் 12:52 அளவில் 59375.55 ஆக ஏற்றம் கண்டது. முக்கியப் பங்குகள், ஒரு சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளன. இன்றைய வர்த்தக நாளில், 59484.99 வரை சென்செக்ஸ் குறியீட்டு எண் ஏற்றம் கண்டது. மேலும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 0.77% உயர்ந்து, 17670 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபத்தைப் பதிவு செய்தன. வங்கித் துறையைப் பொறுத்தவரை, ஆக்சிஸ் வங்கியின் பங்கு 2.52 சதவீதம் உயர்ந்து, 757.45 ரூபாய்க்கும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு 2.19 சதவீதம் உயர்ந்து, 2450.35 ரூபாய்க்கும் வர்த்தகமாயின. மேலும், ஐசிஐசிஐ வங்கியின் பங்கு 1.71 சதவீதம் உயர்ந்து, 863 ரூபாய்க்கும், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு 1.98 சதவீதம் உயர்ந்து, 7289.45 ரூபாய்க்கும் வர்த்தகமாயின. தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு விலையும் ஏற்றம் கண்டது. குறிப்பாக, டெக் மகிந்திரா நிறுவனத்தின் பங்கு 2.34 சதவீதம் உயர்ந்து, 1079.50 ரூபாய்க்கும், விப்ரோ நிறுவனத்தின் பங்கு 2.13 சதவீதம் உயர்ந்து, 439.25 ரூபாய்க்கும் வர்த்தகமாயின. டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு 1.71 சதவீதம் உயர்ந்து, 3413.4 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், பங்குச்சந்தை பெரு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.34% ஏற்றம் கண்டு, 2590.8 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. இன்றைய தினத்தில், 30 பதிவுகளில் 9 பதிவுகள் மட்டுமே இறக்கத்தில் இருந்தன. ஐடிசி, மகிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுசுகி, பவர் கிரேட் போன்ற நிறுவனங்கள் இன்றைய பங்குச் சந்தையில் சரிவு கண்டன.