சென்னை மாநகரில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நேரத்தில், நாள்தோறும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர்.
இதற்கிடையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக,மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியபோது, ஆரம்பத்தில் 20 ஆயிரம் பேர் தினசரி பயணித்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.
கடந்த சில மாதங்களாக தினமும் 1.50 லட்சம் முதல் 1.80 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 லட்சத்து ஆயிரத்து 171 பேர் பயணம் செய்தனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,, "காலை மற்றும் மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில், மெட்ரோ ரயில்களில் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் எளிதாகவும் விரைவாகவும் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல முடிகிறது. இதனால், பயணம் நேரம் மிச்சமாகிறது. எனவே, மெட்ரோ ரயில்களில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார்.