சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு தமிழக சுகாதாரத் துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறையின் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறைச் செயலர் செந்தில்குமார் ஆகியோர் விளக்கினர்.
பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பெண்களுக்கு பேறு காலத்திற்குப்பின் கருத்தடை வளையம் பொருத்தியதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
புதிதாக தொடங்கப்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் விதிமுறைக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அறிகுறி இருந்தால் அவர்களது ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதித்து முடிவுகள் வழங்கப்படும்.
மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பணி வருகை பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் மன உளைச்சலில் இருப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை மூன்று கோடியே 51 லட்சம் பேர் இன்னும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டியது இருக்கிறது. வரும் 7ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.