ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், மூன்று ராணுவத்தினர் வீர மரணம் அடைந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் உள்ள தர்ஹால் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜோரியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த முகாமிற்குள் இரண்டு பயங்கரவாதிகள் இன்று அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். எனினும், ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் பலியாகினர். பயங்கரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதை கூடுதல் காவல்துறை இயக்குனர் அறிவித்தார். மேலும், பயங்கரவாதிகளின் இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில், சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள் மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள் மேன் டி லக்ஷ்மணன் ஆகியோர் வீர மரணம் அடைந்ததாகவும் அறிவித்தார். தற்போது, வீர மரணம் அடைந்த மூன்று ராணுவத்தினரில், டி. லட்சுமணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் மதுரை மாவட்டம் டி. புதுபட்டியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.