இந்திய தபால் துறை மூலம் ஆன்லைனில் தேசியக் கொடியை ஆர்டர் செய்து பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர விழாவை கொண்டாடும் விதமாக வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் சூழலில் இந்திய தபால் துறை மூலம் ஆன்லைனில் தேசியக் கொடியை ஆர்டர் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தங்கள் வீட்டில் கொடியை ஏற்ற விரும்பும் மக்கள் ஆன்லைன் வழியே இந்திய அஞ்சல் துறை மூலம் மூவர்ணக் கொடியை ஆர்டர் செய்யலாம். மேலும் இதற்காக டெலிவரி தொகை கட்டணம் கூட இல்லாமல் பெற முடியும்.
20X30 இன்ச் அளவு கொண்ட தேசிய கொடியின் விலை ரூ.25 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆன்லைன் வழியாக அதிகபட்சம் 5 கொடிகள் வரை ஆர்டர் செய்து பெறலாம்.
தேசியக்கொடிகளை ஆர்டர் செய்ய epostoffice.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம். மேலும் மொபைல் நம்பர், விலாசம் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து தேசிய கொடிக்கான கட்டணத்தை செலுத்திய பின், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தேசிய கொடியை இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் டெலிவரி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.