சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரை அக்டோபர் 2 அல்லது 3 வாரத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. 2022-23-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மார்ச் 18-ம் தேதி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 10-ம் தேதி வரை துறைகள் தோறும் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடத்தி முடிக்கப்பட்டது.
சட்டப்பேரவை விதியின்படி, ஒரு பேரவைக் கூட்டம் முடிந்து அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, வரும் நவ. 10-ம் தேதிக்குள் பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது. இதையடுத்து, இதற்கானபணிகளை சட்டப்பேரவைச் செயலகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரை வரும் அக்டோபர் 2 அல்லது 3-வது வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் ஏற்கெனவே முதல்வர் அறிவித்தபடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆணையத்தின் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.
அத்துடன், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.














