திருப்பூர் ஆடை உற்பத்தியில் ஏற்றுமதிக்கு நிகராக , உள்நாட்டு ஆடை உற்பத்தியிலும் சாதனை படைத்துள்ளது.
தேசிய ஆடை வர்த்தக கண்காட்சி, அவிநாசி அடுத்த பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது. நேற்று காலை நடந்த துவக்க விழாவில், பின்னலாடை தொழில் அமைப்பு பிரதிநிதிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய மேயர் தினேஷ்குமார், தமிழக அரசு தொழில் வளர்ச்சியில் மாநிலத்தை முதலிடத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உலகளாவிய பிராண்டட் நிறுவனங்களை மிஞ்சும்வகையில், திருப்பூர் நிறுவனங்கள் சிறந்த தரத்தில் உள்நாட்டு சந்தைக்கான ஆடை ரகங்களை தயாரிக்கின்றன. ஏற்றுமதியைபோன்று உள்நாட்டு ஆடை வர்த்தகத்திலும் திருப்பூர் முத்திரை பதிக்கும் என்று அவர் கூறினார்.
துணைமேயர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரின் தொழில் பயணம் உள்நாட்டு ஆடை உற்பத்தியுடனேயே துவங்கியது. தற்போது உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதியை போன்று உள்நாட்டு சந்தையையும் வசப்படுத்துவதற்காக ஐ.கே.எப்., சார்பில் கண்காட்சி நடத்தப்படுவது பாராட்டத்தக்கது என்றார்.
'கிளாசிக்போலோ' குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சிவராம் பேசுகையில், திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்புக்கு இணையான அளவில் உள்நாட்டுக்கான ஆடை வர்த்தகமும் நடக்கிறது. இது பலருக்கும் தெரியாது.
ஆண்டுக்கு 500 கோடி முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் மேற்கொள்ளும் பின்னலாடை ஏற்றுமதியாளர்களை எளிதில் அடையாளம் காணமுடியும். ஆனால், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் மேற்கொள்ளும் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை பலருக்கும் தெரிவதில்லை. அவர்கள், சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில், கோடை, குளிர் கால ஆடை வர்த்தகம் பிரதானமாக உள்ளது. எனவே, ஆண்டுக்கு இரண்டு தேசிய ஆடை வர்த்தக கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களை அதிக எண்ணிக்கையில் திருப்பூரை நோக்கி வரச் செய்யவேண்டும். அடுத்த கண்காட்சியின்போது, நாட்டின் பல்வேறு ஆடை வர்த்தகர் சங்கங்களை பங்கேற்கச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார்..
மேலும், 'சைமா' துணை தலைவர் கோவிந்தப்பன், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, 'டீமா' தலைவர் முத்துரத்தினம், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், 'டிப்' தலைவர் மணி, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உட்பட தொழில் அமைப்பு பிரதிநிதிகள் கண்காட்சியை வாழ்த்தி பேசினர்.