அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைபே பயணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதன் முக்கிய தீவில் சனிக்கிழமை சீனா இராணுவப் பயிற்சிகள் நடத்தியதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.
பெய்ஜிங் சனிக்கிழமையன்று தைவானைச் சுற்றி அதன் மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளில் சிலவற்றைத் தொடர்ந்தது. இவை தீவின் மீது படையெடுப்பை நோக்கமாகக் கொண்ட பயிற்சிகள் போன்று இருந்தது.
இதனையடுத்து தைவான் ஜலசந்தியில் பல சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் இயங்குவதை கவனித்து கொண்டிருப்பதாக தைபே கூறியது.
'தைவான் ஜலசந்தியைச் சுற்றி பலவிதமான கம்யூனிஸ்ட் விமானங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அவற்றில் சில இடைநிலைக் கோட்டைக் கடந்தன" என்று அதன் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சீனாவிற்கும் கொரியாவிற்கும் இடையில் அமைந்துள்ள மஞ்சள் கடலின் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 15 வரை நேரடி துப்பாக்கிச் சூடு ஒத்திகையை நடத்தப்போவதாக பெய்ஜிங் தெரிவித்துள்ளது.
பயிற்சியின் போது சீன ஏவுகணைகள் நேரடியாக தைவான் மீது பறந்ததாக சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உறுதிசெய்யப்பட்டால் இது ஒரு பெரிய அத்துமீறலாகும்.
சீனாவின் பயிற்சிகளின் அளவும் தீவிரமும் அமெரிக்காவிலும் பிற ஜனநாயக நாடுகளிலும் சீற்றத்தைத் தூண்டியுள்ளன. பெலோசியின் தைவான் பயணத்தை அடுத்து இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் தளர்ந்துள்ளன. பெய்ஜிங் வாஷிங்டனுடனான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக கூறியது.