இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் அயனி மண்டலத்தில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்துள்ளது.
இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தற்போது நிலவின் பிரகாசமான பகுதியில் உள்ள அயனி மண்டலத்தில் பிளாஸ்மா இருப்பதை இது கண்டறிந்துள்ளது. நிலவின் பிரகாச பகுதியில் சூரிய கதிர்களும், சூரிய காற்றும் நேரடி தொடர்பில் இருக்காது. ஆனாலும் அந்தப் பகுதியில் பிளாஸ்மா உருவாகி உள்ளது. எனவே, இதனை ஆய்வு செய்வதன் மூலமாக நிலவின் இருளான பக்கத்தில் உள்ள அயனி மண்டலம் மற்றும் பிளாஸ்மா குறித்து அறிய முடியும். மேலும், இதன் மூலம் பகல் பொழுது மட்டுமல்லாது இரவு பொழுதுகிளில் நிலவில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் குறித்தும் அறிய முடியும். இந்த ஆய்வு முடிவுகள் Monthly Notices of the Royal Astronomical Society என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளிவந்துள்ளன. சந்திராயன் 2 கொடுத்த ரேடியோ சிக்னல்களை வைத்து, நிலவின் அயனி மண்டலக் கூறுகளை, புவியின் காற்று மண்டலத்துடன் ஒப்பிட்டாய்வு செய்ததாக இஸ்ரோ கூறியுள்ளது. மேலும், அந்திப் பொழுதுகளில் நிலவின் துருவப் பகுதிகளில் அதிக அளவில் எலக்ட்ரான் காணப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. அத்துடன், தற்போது கிடைத்துள்ள பிளாஸ்மா குறித்த தகவல்களைக் கொண்டு, கோட்பாட்டளவில் நிலவின் இருளான பக்கத்தில் உள்ள பிளாஸ்மா கூறுகளை அறிந்து கொள்ள இயலும் என்றும் இஸ்ரோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. சந்திராயன் 2 இதுவரை அளித்த தகவலின் படி, நிலவின் பிரகாச பகுதியில் ஆர்கான் மற்றும் நியான் ஆகியவை அதிக அளவில் இருப்பதாகவும், நிலவின் மறுபக்கத்தில் கரியமில வாயு மற்றும் தண்ணீர் ஆகியவை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சமீபத்தில், எஸ்எஸ்எல்வி என்ற சிறிய ரக ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், சந்திராயன் 2 மூலமாக கிடைத்துள்ள ஆய்வுத் தகவல்கள் நம்பிக்கை அளிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.