இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்று காலை 10:25 மணி அளவில், இந்திய பங்குச் சந்தையில் புதிய உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 636.93 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. எனினும், இன்று பிற்பகல் முதல் பங்குச் சந்தையில் சரிவு போக்கு காணப்பட்டது. இறுதியாக, இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 164.99 புள்ளிகள் உயர்ந்து, 65558.89 ஆக பதிவாகியுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 29.45 புள்ளிகள் உயர்ந்து, 19413.75 புள்ளிகளாக உள்ளது.
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான சூழல் மற்றும் அமெரிக்க பணவீக்கம் ஆகிய காரணங்களால் நேற்றைய சரிவிலிருந்து இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், டிசிஎஸ், ஹிந்தால்கோ, இன்ஃபோசிஸ், எல்டிஐ மைண்ட்ட்ரீ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், மாருதி சுசுகி, பவர் கிரிட், கோல் இந்தியா லிமிடெட், ரிலையன்ஸ், ஹெச் சி எல் டெக் ஆகிய நிறுவனங்கள் இறக்கமடைந்துள்ளன.














