கரிப் சாகுபடியில், பருவ மழை பொய்த்ததன் காரணமாக, நெல் உற்பத்தியில் 13% சரிவு காணப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழையைக் கணக்கிட்டு, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பயிர் செய்யப்பட்டு, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் பயிர்கள், கரிப் சாகுபடி பயிர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வருடத்தில் ஜூலை 29ஆம் தேதியின் கணக்குப்படி, சுமார் 23.15 மில்லியன் ஹெக்டேரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் கரிப் நெல் சாகுபடி 26.70 மில்லியன் ஹெக்டேரில் நடைபெற்றது. இதனை ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் 13 சதவிகித சரிவு காணப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் தென்மேற்கு பருவ மழை தாமதமாகத் தொடங்கியது. மேலும், இந்தியாவின் அதிக நெல் உற்பத்தி மாநிலங்களான மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர், அசாம், கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் குறைவான அளவு பருவமழையே பதிவானது. மேலும், நெல் உட்பட அனைத்து கரிப் பயிர்களின் சாகுபடி, 82.34 மில்லியன் ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் இது 84.16 மில்லியன் ஹெக்டேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, கரிப் சாகுபடியில் சரிவு ஏற்பட்டுள்ளது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நாட்டில் கோதுமை இருப்பு 285.10 லட்சம் மெட்ரிக் டன் உள்ளது என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது, கரீப் பருவத்தின் நெல் சாகுபடியும் குறைந்துள்ளதால், நாட்டில் உணவு தானியத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.