‘தேசிய கல்விக்கொள்கை 2020’-ன் 2ம் ஆண்டு நிறைவையொட்டி பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) சார்பாக உயர்கல்விக்கான புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக மானியக்குழுவின் புதிய இணையதளத்தில் 23 ஆயிரம் உயர்கல்வி படிப்புக்கள் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த இணையதளத்தின் மூலம் 23 ஆயிரம் உயர்கல்வி படிப்புகளை இலவசமாக படிக்கலாம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து பல்கலைக் கழக மானியக்குழு, இந்த புதிய இலவச இணையதள கல்வி சேவை நடவடிக்கையை எடுத்துள்ளது.
நாட்டில் கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வியை வழங்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 7.5 லட்சத்துக்கும் அதிகமான பொது சேவை மையங்கள் மற்றும் சிறப்பு வாகன மையங்களுடன் ஒருங்கிணைந்து 2022-2023ம் கல்வியாண்டில் இந்த இலவச படிப்புக்கள் வழங்கப்பட உள்ளது. இந்த அனைத்து படிப்புகளையும் யார் வேண்டுமானாலும் இலவசமாக பெறலாம்.
எனினும், சிஎஸ்சி மற்றும் எஸ்விபி.யின் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை பெறுவதற்கு ஒரு நாளைக்கு ரூ.20 அல்லது மாதத்திற்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இது ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா, பிரதமரின் ஷ்ரம் யோகி மான்தான் யோஜனா திட்டங்களை போன்றதாகும்.