புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம்அளிக்கப்படுகிறது என மத்திய கல்வித் துறை திறன் மேம்பாடு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தஞ்சாவூர் பெரிய கோவில் தென்னிந்திய கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. கட்டடக்கலை, கட்டுமானம், கட்டமைப்பு துறைகள் எதுவும் இல்லாத காலத்தில் முன்னோர்கள் மிகச் சிறந்த கட்டடத்தைக் கட்டியுள்ளனர்.
இந்தியாவின் உணவு பழக்கம், மருத்துவம் உள்ளிட்டவை உலக அளவில் பின்பற்றப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராட்டி, பஞ்சாபி, ஹிந்தி, ஒடியா உள்பட அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் என பிரதமர் கூறுகிறார். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் தாய்மொழியில் தான் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். தேசிய கல்விக் கொள்கை வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏற்றவர்களாக மாணவர்களை உருவாக்குகிறது என்றார்.
மேலும் தெரு வியாபாரிகள், கிராமப்புற வணிகர்கள் மற்றும் ஊரக நுகர்வோர்கள் என 40 சதவீதம் பேர் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையைக் கடைபிடிக்கின்றனர்.இந்தத் திட்டத்தில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று அவர் கூறினார்.