புதிய கல்விக் கொள்கையானது இந்திய மாணவர்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களை நிச்சயம் ஈர்க்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் மாபெரும் இந்தியாவை உருவாக்குவதற்கான விதைகளை பிரதமர் மோடி தூவியுள்ளார். முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவனை குறிப்பிட்ட துறையில் நிபுணராக மட்டுமே மாற்றியது. புதிய தேசியக் கல்விக் கொள்கை மாணவனை சிறந்த மனிதனாக மாற்றிக்காட்டும் என்று கூறினார்.
ஒரு நாடு சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமை திறன் தேவை. ஆறுகள் மற்றும் மலைகளால் மட்டுமே நாடு சிறப்பான நாடாக மாறாது. கல்வி கொள்கையின் மூலம் மட்டுமே அந்த மாற்றத்தை கொண்டு வர முடியும். புதிய கல்வி கொள்கையானது இந்திய மாணவர்களை மட்டுமல்லாது வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும். ஏனெனில், இதில் இந்திய கலாச்சாரம், கலைகள், தாய்மொழி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய தேசிய கல்வி கொள்கையானது அடுத்த 20 ஆண்டுகளில் ஆலமரமாக உருவெடுத்து இந்தியாவை மட்டுமல்லாமல் உலகம் முழுவதையும் வழிநடத்தும் என்று அவர் கூறினார்.