பிரபல டிஜிட்டல் நிதி நிறுவனமான பேடிஎம், கடன் சேவைகள் வழங்குவதில் 17% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தில், 29000 கோடி ரூபாய் மதிப்பில், கடன் சேவைகளை நிறுவனம் வழங்கி இருந்தது. இந்நிலையில், 2022 செப்டம்பர் மாத நிறைவில், 34000 கோடி ரூபாய் மதிப்பில், கடன் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. நிறுவனம், வழக்கமாக பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கும் அறிக்கையில், இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடன் சேவைகளின் எண்ணிக்கை அடிப்படையில், மூன்று மடங்கு உயர்வை பேடிஎம் பதிவு செய்துள்ளது. கடந்த வருட செப்டம்பர் மாத இறுதியில், 2.8 மில்லியனாக இருந்த கடன் சேவைகளின் எண்ணிக்கை, இந்த வருடத்தில் 9.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடன் மதிப்பு அடிப்படையில், 1257 கோடியில் இருந்து 7313 கோடியாக உயர்ந்துள்ளது. அத்துடன், நிறுவனத்தின் மாதாந்திர பரிவர்த்தனை 39% உயர்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, கடன் சேவைகள் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே நல்ல வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.