அரசு பேருந்துகளில், பெண் பயணிகளை முறைத்து பார்ப்பது, கண் சிமிட்டுவது, சைகை காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை உடனடியாக நடத்துநர்கள் கீழே இறக்கி விடலாம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பொது போக்குவரத்து வாகனத்தில் பின்பற்றக்கூடிய வகையில் மோட்டார் வாகன விதிகளில் சேர்ப்பதற்காக சில வரைவு திருத்தங்கள் உருவாக்கப்பட்டு, விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில், பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணி முறைத்து பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக் கூடிய சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் போன்றவற்றை செய்யக் கூடாது. குறிப்பாக, அவர்களின் செயல்கள், சக பெண் பயணிக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. நடத்துனர் எச்சரிக்கை விடுத்த பிறகு, புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். மேலும் பெண் பயணிகள் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவும் போது தவறான நோக்கில் நடத்துநர்கள் தொடக்கூடாது.
பெண்கள், சிறுமிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடத்துநர்கள் நடந்து கொள்ளக் கூடாது. நடத்துநர்களின் பணி குறித்து தெரிவிக்கும் வகையில் வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். காவல் அதிகாரிகள் கேட்கும் போது அந்த புகார் புத்தகத்தை அளிக்க வேண்டும். நடத்துநர் இல்லாத போது மேற்கூறியவை அனைத்தும் ஓட்டுநரின் பொறுப்பாகும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.