போக்குவரத்து துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையில் , போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது.
தமிழக போக்குவரத்து துறை உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு, பதிவு புதுப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், தகுதிச்சான்று வழங்குதல், மோட்டார் வாகன வரி, பசுமை வரி உள்ளிட்டவற்றின் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. கடந்த ஆண்டு இதன் மூலம் ரூ.5,272 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில், மோட்டார் வாகன வரி, பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற சேவைக் கட்டணங்களை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு, கடந்த ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சேவை கட்டணங்கள் 10மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகப் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் ரூ.200 ஆகவும், வேறு மண்டலங்களில் வாகன தகுதிச்சான்று பெற கட்டணமாக ரூ.500-ம், நகல் பெற ரூ.250-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஃப்எக்ஸ் நோட்டீஸுக்கான கட்டணம் ரூ.500 ஆகவும், மோட்டார் வாகன ஆய்வாளர் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ரூ.500 ஆகவும், வாகன ஆவணங்களுக்கான சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாகனச் சோதனை மையங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரூ.5,000 ஆகவும், அனுமதியைப் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.3,000 ஆகவும், புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் தாமதமாக சமர்ப்பித்தால் ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கருத்துகள், எதிர்ப்புகளைத் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலஅவகாசம் முடியவுள்ள நிலையில், தற்போது இந்த கட்டண உயர்வு இம்மாத இறுதியில் அமலாகலாம் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.













