மகாராஷ்டிரா மும்பை அருகே உள்ள கார்கர் பகுதியில், சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு 'மகாராஷ்டிர பூஷண்' விருது வழங்கும் விழா திறந்தவெளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பங்கேற்றனர். எனவே, லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். இதில், கடுமையான வெயில் காரணமாக 11 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காலை 11:30 முதல் மதியம் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக, கூடியிருந்த மக்களுக்கு நீர் இழப்பு போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ உதவி பந்தல்களுக்கு கிட்டத்தட்ட 123 பேர் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.