உத்தர பிரதேசத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுமார் ரூ.500 கோடிக்கு கிருஷ்ணர் ஆடைகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி உள்ளன.
கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று, கிருஷ்ணரின் சிலைகளுக்கு வண்ணமயமான புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் மதுராவில் உள்ள தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்பனையாகி வருகின்றன.
இந்த உடைகள் ரூ.20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, போலந்து, துபாய் உள்ளிட்ட 18 வெளிநாடுகளில் இருந்து மதுரா தையல் கலைஞர்கள் ஆர்டர் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் வியாபாரி சோமேஷ்வர் அகர்வால் கூறும்போது, “இந்த ஆண்டு சுமார் ரூ.500 கோடிக்கு கிருஷ்ணர் ஆடைகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி உள்ளன. உலகிலேயே கிருஷ்ணருக்கு மட்டும்தான் அதிக வகைகளிலான ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இதன் பலன் கிருஷ்ண ஜென்ம பூமி வாசிகளான எங்களுக்கு கிடைத்து வருகிறது” என்றார்.
மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி, பாங்கே பிஹாரி, ஹரே கிருஷ்ணா ஆகிய கோயில்களில் உள்ள கிருஷ்ணர் சிலைகளுக்கு விலை மதிப்புள்ள ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.
பிருந்தாவனில் உள்ள பாங்கே பிஹாரி கோயிலில் ஜீன்ஸ், டிஷர்ட் அணிய வைத்து கையில் ஒரு மொபைல் போனை கொடுத்து நவீன கிருஷ்ணராக மாற்றி ரகசிய பூஜை செய்யப்பட்டது. ஜீன்ஸ், டி ஷர்ட் அலங்காரத்தில் இருந்த கிருஷ்ணர் சிலையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, அந்த ஆடைகளையும் வெளி நாட்டவருக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்றது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.