நாட்டில் உள்ள அமைப்புசாராத் துறை தொழிலாளர்களின் நிதி பற்றாக்குறையை போக்கும் வகையில் மோடி அரசு சில ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டம் ஒன்றாகும். இத்திட்டம் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு 200 ரூபாய் முதலீடு செய்து ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியம் பெற வழிசெய்கிறது.
வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், சுமை தூக்குபவர்கள், போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் மாத வருமானம் ரூ. 15,000- திற்கும் குறைவாக உள்ள 18-40 வயதுடையவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். அதேபோல் பயனாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS), ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) திட்டம் அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆகியவை இருக்கக்கூடாது. மேலும், பயனாளர் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. PM-SYM திட்டத்தின் கீழ் உள்ள பயனாளர்கள், 60 வயதை எட்டிய பிறகு, 3000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். அதேபோல் ஆண் பயனாளர் இறந்தால், பயனாளரின் மனைவி பெறும் ஓய்வூதியத்தில் 50% தொகையைக் குடும்ப ஓய்வூதியமாகப் பெற முடியும். இத்திட்டத்தில் இணைவதற்கு பயனாளர் மொபைல் போன், சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். பின் சுய சான்றிதழின் அடிப்படையில் ஆதார் எண் மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு/ ஜன்-தன் கணக்கு எண்ணைப் பயன்படுத்தி PM-SYM கணக்கைத் தொடரலாம்.