மாநில கல்வி கொள்கை தொடர்பாக கருத்து கேட்பதற்கான காலஅவகாசம் அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழகத்தில் தனித்தன்மையான மாநில கல்வி கொள்கையை கொண்டு வர ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி கொள்கை தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்புவோர் தங்கள் கருத்துக்களை stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அதோடு 'சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் கட்டடம், மூன்றாம் தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணா பல்கலைகழகம் , சென்னை - 600025' என்ற முகவரிக்கு அனுப்பலாம். கருத்துக்களை தெரிவிக்க செப்டம்பர் 15 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலஅவகாசம் தற்போது அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டம் செப்டம்பர் 20ல் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவல வளாகம், 21ல் மதுரை கலெக்டர் அலுவலக வளாகம், அக்டோபர் மூன்றாம் வாரம் திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலும் நடத்தப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.