பள்ளிக் குழந்தைகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்குவதற்கு ஆர்வமுள்ள சேவை வழங்குநர்களிடமிருந்து கோவை மாநகராட்சி ஒப்பந்தம் கோரியுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலானவை காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நகரில் அடையாளம் காணப்பட்ட 62 மாநகராட்சிப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 7,618 மாணவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு உணவு வழங்க ஏலம் விடப்பட்டது.
காலை உணவுப் பொட்டலத்தில் 150 முதல் 200 கிராம் சத்தான உணவு மற்றும் 60 மில்லி காய்கறி இருக்கும். ஏலதாரர் ஒரு பொதுவான சமையலறையை பராமரிக்க வேண்டும்.நியமிக்கப்பட்ட பள்ளிகளுக்கு அட்டவணைப்படி சரியான நேரத்தில் சமைத்த காலை உணவை வழங்க போதுமான வாகனங்கள் இருக்க வேண்டும்.
இது குறித்து மாநகராட்சி துணை ஆணையர் எம். ஷர்மிளா கூறுகையில், ஐந்து மண்டலங்களில் தலா ஒன்று என ஐந்து பள்ளிகளை விநியோக புள்ளிகளாக மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது. அந்த வகையில்,
ஆர்.எஸ்.புரம், கணபதி, ஒண்டிப்புதூர், கணேசபுரம் மற்றும் செல்வபுரம் ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகள் விநியோக மையங்களாக செயல்படும்.
காலை உணவுக்கான கட்டணமாக ஒரு மாணவருக்கு ₹10 முதல் ₹12 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட சமையலறையின் இடத்தை ஒப்பந்ததாரர் தேர்வு செய்யலாம். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளின்படி சேவை வழங்குநர் சமையலறையை பராமரித்து உணவை தயாரிக்க வேண்டும்.
மொபைல் செயலி மூலம் உணவு விநியோகத்தை கண்காணிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதோடு மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் அவ்வப்போது உணவு பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்வர் என்றுஅவர் கூறினார்.