தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் வீரர்களை உருவாக்கும் பொருட்டு, ‘‘ஒலிம்பிக் தங்க வேட்டை’’ என்ற திட்டம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேற்று நடைபெற்றது . விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு வெகு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. கடந்த 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேரு உள் விளையாட்டு அரங்கில் மாபெரும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளோடு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார். இங்கு வருகை தந்த செஸ் விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள் குறித்து சமூக ஊடகங்களில் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
4 மாதங்களில் பன்னாட்டு விளையாட்டை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கு காரணமான தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனையும், துறை செயலாளர் அபூர்வாவையும், அவர்களுக்கு துணையாக நின்ற அரசு அதிகாரிகளையும் நான் மனதார பாராட்டுகிறேன். இந்த போட்டி, இந்தியாவில் நடைபெறும் பன்னாட்டு திருவிழாவை போல நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வோரை உருவாக்கும் பொருட்டு, ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பன்னாட்டு பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வடசென்னையிலும், கோபாலபுரத்திலும் குத்துச்சண்டை அகடமிகள் உருவாக்கப்பட உள்ளன. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பிரமாண்டமான தனி விளையாட்டு களம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. சர்வதேச கடற்கரை போட்டிகளையும் நடத்த தமிழகம் தயாராக உள்ளது. சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத் தரவும் முயன்று வருகிறோம்.
இறுதியில்,வெற்றிபெற்ற வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்புதான் முக்கியமானது என்று பேசினார்.