அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பரவலால் விமான போக்குவரத்து துறை பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. இதனால் அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் விமான பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இதனால் உள்நாட்டு விமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அந்த நிறுவனங்களிடம் 1,200 விமானங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-14ம் ஆண்டில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது கூடுதலாக 67 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் விமான நிலையங்களின் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.