''நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் சந்திக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, ராணுவ அதிகாரிகளின் கல்வி மற்றும் பயிற்சி முறையை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது,'' என,விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில், ராணுவத்தில் பணியில் சேர விரும்புபவர்களை தயார் செய்வதற்காக, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த பல்கலைகழகத்துடன் நம் விமானப்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேற்று காந்திநகர் வந்தார்.
அப்போது நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தகவல் தொழில்நுட்ப உலகில் அறிவு ஒரு மைய ஆதாரமாக மாறி வருகிறது. மேலும் போர் யுக்தி மற்றும் புவிசார் அரசியல், தகவல் பரவலால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தலின் தன்மைகளும் மாறி வருகின்றன. இவற்றை எதிர்கொள்ள நாம் பல புதிய வழிமுறைகளை கையாள வேண்டி உள்ளது.
இவை நாம் முன்பின் அறிந்திடாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இதுபோன்ற சவாலான சூழலை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான, புதிய நடைமுறைகளை நாம் கண்டறிய வேண்டும். எனவே எதிர்கால போர்களுக்கு நம் அதிகாரிகளை தயார் செய்ய வேண்டும். அதற்காக, அவர்களுக்குஅளிக்கப்படும் பயிற்சி மற்றும் கல்வியை மேம்படுத்துவதுடன், பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.