பொருளாதார குற்றவாளிகளிடமிருந்து 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை மத்திய அரசு மீட்டுள்ளது.
டெல்லியில் நேற்று சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நம் நாட்டில் பொருளாதார மோசடியில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய குற்றவாளிகளை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அத்தகைய குற்றவாளிகளிடமிருந்து 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை மத்திய அரசு மீட்டுள்ளது. இதற்கு பண மோசடி தடுப்பு சட்டம் உதவியது. 2014 முதல் இதுவரையில் பொருளாதார குற்றவாளிகளிடமிருந்து ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 19 குற்றவாளிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சமீப ஆண்டுகளில் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பணமோசடியாளர்களை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.