கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், ஜிஎஸ்டி வரி வசூல் மற்றும் ஏய்ப்பு குறித்த விவரங்களை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் 1.01 லட்சம் கோடி மதிப்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 21,000 கோடி ஏய்ப்புத் தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் நிதி ஆண்டில், 54000 கோடி மதிப்பில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2023 ல் வரி ஏய்ப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 2021 ஆம் நிதி ஆண்டில் 12596 என்று எண்ணிக்கையிலும், 2022-ம் நிதி ஆண்டில் 12574 ஆகவும் வரி ஏய்ப்பு பதிவானது. இது, கிட்டத்தட்ட சம அளவு உள்ளதாக கருதப்பட்டது. ஆனால், 2023 ஆம் நிதியாண்டில், 14000 வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டுமொத்தமாக, கடந்த 2017 ஜூலை மாதம் முதல் 2023 பிப்ரவரி மாதம் வரையில், 3.08 லட்சம் கோடி மதிப்பில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிய, தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.