இலங்கை கடற்படையால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையிலிருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன்பிடிக்க ஆகஸ்ட் 22ம் தேதி காலை கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும் திரிகோணமலை கப்பற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
கைது செய்த 10 பேரை செப்டம்பேர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்திலிருந்து ஆகஸ்ட் 6ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து, விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களையும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 22ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 6ம் தேதி கைது செய்தவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் அவர்களை விடுதலை செய்ய இலங்கையின் திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.