மத்திய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற சஜித் தத், காஷ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்த பசிட் அகமது ரேஷி, இம்தியாஸ் அகமது கான்டூ என்ற சஜத், பூஞ்ச் பகுதியை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானை சேர்ந்தவருமான ஜாபர் இக்பால் என்ற சலிம், புல்வாமாவை சேர்ந்த ஷேக் ஜமீல் உர் ரகுமான், ஸ்ரீநகரை சேர்ந்த பிலால் அகமது பெய்க் என்ற பாபர், பூஞ்ச் பகுதியை சேர்நத் ரபிக் நய் என்ற சுல்தான், தோடா பகுதியை சேர்ந்த இர்ஷாத் அகமது என்ற இத்ரீஸ், குப்வாரா பகுதியை சேர்ந்த பஷிர் அகமது பீர் என்ற இம்தியாஸ், சவுகத் அகமது ஷேக் என்ற சவுகத் மோச்சி ஆகிய 10 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஹபிபுல்லா மாலிக், பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கையாண்டவர். காஷ்மீரில் டிரோன் மூலம் ஆயுதங்கள் போடப்பட்டதில் சம்பந்தப்பட்டவர். காஷ்மீரில் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்.
பசிட் அகமது ரேஷி, காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டு கொடுத்தவர். இம்தியாஸ் அகமது கான்டூ, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தவர். பல தாக்குதல்களை ஒருங்கிணைத்தவர். ஜாபர் இக்பால், காஷ்மீரில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவலில் தொடர்புடையவர். மற்ற 6 பேரும் பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.