தமிழகம் முழுவதும் 11 இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மின் பகிர்மானக் கோட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் ஏற்கெனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் உள்ளது. இதையடுத்து, கோட்டங்களுக்கு இடையிலான மின் இணைப்புகளின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்துவது, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்வது, புகார்கள் மீது உடனடியாகத் தீர்வு காண்பது, அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கெனவே உள்ள 176 மின் பகிர்மானக் கோட்டங்களுடன் கூடுதலாக சேப்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தேன்கனிக்கோட்டை, பென்னாகரம், திருவெண்ணெய்நல்லூர், ஊத்துக்குளி. வேடசந்தூர், ஜெயங்கொண்டம், சாத்தூர், கெங்கவல்லி ஆகிய 11 இடங்களில் புதிதாக மின் பகிர்மானக் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.