கடந்த 11 மாதங்களில் மெட்ரோ ரெயிலில் அதிக முறை பயணம் செய்த 330 பயணிகளுக்கு ரூ.11 லட்சத்தில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயிலில் ஒவ்வொரு மாதமும் அதிகமுறை பயணம் செய்யும் பயணிகளுக்கு குலுக்கள் முறையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி பேசுகையில், சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருள் மற்றும் 30 பேருக்கு விருப்பம்போல பயணம் செய்ய பயண அட்டை என்ற அடிப்படையில், கடந்த 11 மாதங்களில் 110 பயணிகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 500-க்கான பரிசு பொருள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் மெட்ரோ ரெயில் நிறுவனம் நடத்திய அதிர்ஷ்டக்குலுக்கல் மூலம் 330 பயணிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.