தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில் 500 மருத்துவமனைகள் முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் அரசு சார்பில் 6 நர்சிங் பயிற்சி கல்லூரியும், 25 நர்சிங் பயிற்சி பள்ளியும் உள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கு தலா 100 இடங்களுடன் 11 புதிய நர்சிங் பயிற்சி கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.














