அமீரகத்தைச் சேர்ந்த மலைப்பகுதியில் 13000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் இயற்கை வளம் நிறைந்த புஜேரா ஹஜார் மலைத்தொடரில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமீரகத்தை சேர்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வில் சுமார் 30 இடங்களில் மனிதர்கள் வாழ்ந்த பகுதிகளை கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த மலைத்தொடரில் உள்ள பாறை இடுக்குகளில் பழங்கால மனிதர்கள் தங்கி இருந்த ஆதாரங்களை சேகரித்துள்ளனர். மேலும், இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு கலாச்சாரங்களை சேர்ந்தவர்களாகவும், 7500 முதல் 13000 ஆண்டுகளுக்குள் வசித்ததாகவும் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு கலாச்சார மனிதர்கள் இங்கு வாழ்ந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். முதலில் வேட்டையாடி வாழ்ந்த மக்களும், அதன் பிறகு கால்நடைகளை வளர்த்த மக்களும், தொடர்ந்து உணவை உற்பத்தி செய்து சமைத்து உண்டு வாழ்ந்த மக்களும் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.