மும்பையில் இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனை கட்டிடத்திற்கு அடியில், 132 ஆண்டுகள் பழமையான சுரங்கம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை கட்டிடம் மிகவும் பழமையானதாகும். இந்த கட்டிடம் 1843 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 1845 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கல்லூரியில், அந்த காலத்திலேயே 8 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த மருத்துவமனை தற்போதும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வளாகம், தற்போது செவிலியர் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த செவிலியர் கல்லூரி கட்டிடத்தில், நீர் கழிவு புகார் எழுந்ததை அடுத்து, அதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் இங்கு வந்தனர். மராமத்து பணிகளை மேற்கொள்ளும் முன்னர், பொதுப்பணி துறையைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பழமையான இந்த மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, 1890 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுரங்கம் மருத்துவமனைக்கு அடியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் சுமார் 200 மீட்டர் நீளத்துடன், செங்கற்களால் அமைந்த தூண்களை கொண்டுள்ளது. இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.