சென்னை மாநகராட்சி மேற்கொண்ட கள ஆய்வில் கடந்த 2 வாரங்களில் 1470 விதிமீறிய கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே விதிகளை மீறி கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கடந்த 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான இரு வாரங்களில் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 1,470 விதிமீறல் கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 9ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.