சென்னை நகரில் 15 மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு ஏற்ப பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பருவமழை காலத்தில் மழைநீர் தேங்காதவாறு கடலில் கலக்கும் வகையில் 5,630 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1,334 கி.மீ. மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 15 மண்டலங்களில் நடைபெறும் இந்த பணிகள் அனைத்தையும் பருவமழைக்கு முன்னரே முடித்துவிட ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் வடபழனி, பூந்தமல்லி, திருவான்மியூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகளும், மின்சார வாரியத்தின் சார்பாக புதை மின்வடம் அமைக்கும் பணிகளும், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பாக பழைய குடிநீர், கழிவுநீர் குழாய்களை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த பணிகளால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து விளக்கமளித்த சென்னை மாநகராட்சி துணைமேயர் மகேஷ்குமார், மழைநீர் வடிகால்கள் கட்டுமான பணிகள் முதல்கட்டமாக தற்போது 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறினார். மண்டலத்திற்கு 1 ஐ.ஏ.எஸ். அதிகாரி என 15 பேர் நியமிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். 2-ம் கட்ட முன்னுரிமை இடங்களான மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் 40 சதவீத பணிகள் முடிந்துள்ளது. ஆனால், முழுமையாக பணிகள் முடிவடையாத நிலையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது இன்னும் சவாலாக மாறியிருக்கிறது என்பதே பொதுமக்களின் கவலையாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.